Sunday, June 20, 2010

அன்புள்ள அப்பா..

அன்புள்ள அப்பா..
இன்று உலகமே நினைவுகூறும் தந்தையர் தினம்...தந்தையை மகிழ்விக்க பிள்ளைகளுக்குத் தரப்பட்ட உன்னத தினம்...தாங்கள் என்னையும்,தங்கையையும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அன்போடு கவனித்துவருகிறீர்களே அது போன்ற ஒரு தந்தைக்காக அவரது மகள் எடுத்த முயற்சியால் உதித்த தினம்...
அப்பா..!

நம்பிக்கையின் உயிர் வடிவம் நீங்கள்..உலகின் வேறு எந்த சக்தியைக்காட்டிலும் மிகவும் வலியது தங்களுடனான என் இருப்பு....என் உலகம் நீங்கள் ..நான் பார்த்துணர்ந்த முதல் புத்தகம் தாங்கள்...என் பிஞ்சு விரல்களை உம் அஞ்சு விரல்கள் பற்றும் பொழுது பரவும் நம்பிக்கையை இன்று வரை வேறு எந்த விரல்களும் ஏற்படுத்தியதில்லை...மூச்சடக்கி தரையின் ஆழம் வரை சென்று நீர் எடுக்கும் வேரின் வலியை விழுதுகளோ,பறவைகளோ உணர்வதில்லை இருப்பினும் வேர்கள் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது..நீங்கள் என் வேர்..வசந்த காலங்களை மட்டுமே எமக்கு கொடுத்து இலையுதிர் காலத்தை இல்லாது செய்த வேர்.

அப்பா!
அங்குலம் அங்குலமாய் உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்...உங்களால் எழுதப்பட்ட கவிதை நான்...ஆண்டுகள் 30 ஐக் கடந்த பின்பும் இக்கவிதையின் மீதான திருத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இருப்பினும் இன்னும் முழுமை பெறவில்லை என்பதில் தங்களுக்கு வருத்தம்தான்...அது அக் கவிதையை எழுதிய தங்களின் தவறல்ல எழுதப்பட்ட கவிதையின் தவறு.....
அங்குலம் அங்குலமாய் என்னை செதுக்கிய சிற்பியே!
தங்கள் வாழ்வின் அத்தனை நொடிகளும் என்னைப்பற்றிய நினைவுகளையே சுமந்து வருகிறது என்பதை நான் அறிவேன்...தங்கள் பார்வையின் வீச்சும் என்னை நோக்கிய இலக்காகவே இருந்து வருகிறது என்பதையும் அறிவேன்..
நீங்கள் எனக்களித்துவரும் சுதந்திரம் இன்னும் என்னை பிரமிக்க வைக்கிறது..என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை வியக்கச் செய்கிறது..
இந்த நன்னாளில் தங்களின் ஆசிகளோடு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...